ஸ்டோக்ஹம்: சுவீடனின் ஆகப் பெரிய கேளிக்கைப் பூங்காவில் பிப்ரவரி 12ஆம் தேதியன்று தீ மூண்டது. இதில் ஒருவரைக் காணவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லிஸ்பர்க் கேளிக்கைப் பூங்காவில் புதிதாகக் கட்டப்பட்ட நீர் விளையாட்டுப் பூங்காவில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
கேளிக்கைப் பூங்காவுடன் இணைக்கப்பட்டுள்ள ஹோட்டல், அலுவலகங்கள் ஆகியவற்றில் இருந்தோரைக் காவல்துறையினர் வெளியேற்றினர்.
புகை அதிகமாக இருந்ததால் வெளியே வர வேண்டாம் என்றும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும் அருகில் இருந்த குடியிருப்புப் பகுதிகளில் வசிப்போருக்கு அறிவுறுத்தப்பட்டது.
சுவீடன் நேரப்படி பிப்ரவரி 13ஆம் தேதி காலை வரை தீயணைப்புப் பணிகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.
தீச்சம்பவத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
ஆனாலும் அது பணியிட விபத்தாகக் கருதப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.