ஸ்டோக்ஹோம்: சுவீடனின் ஆகப் பெரிய கேளிக்கைப் பூங்காவில் பிப்ரவரி 13ஆம் தேதியன்று தீ மூண்டது.
லிஸ்பர்க் கேளிக்கைப் பூங்காவில் தீ மூண்டு 24 மணி நேரத்துக்கு மேலாகிவிட்ட நிலையில், அது தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிகிறது.
தீயை அணைக்க தீயணைப்புப்படையினர் தொடர்ந்து கடுமையாகப் போராடி வருகின்றனர்.
தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக பிப்ரவரி 13ஆம் தேதியன்று தீயணைப்புப்படையினர் தெரிவித்திருந்தனர்.
ஆனால் நிலைமை மோசமடைந்துவிட்டதாக கொத்தன்பர்க் அவசரநிலை சேவையின் செய்தித்தொடர்பாளர் அன்று மாலை தெரிவித்தார். எனினும், மற்ற இடங்களுக்குத் தீ பரவும் அபாயம் இல்லை என்று அவர் உறுதி அளித்தார்.
தீச்சம்பவத்தில் ஒருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவரது இருப்பிடம், நிலை குறித்து இன்னும் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீச்சம்பவம் காரணமாக 16 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று சுவீடன் காவல்துறை தெரிவித்தது.