பேங்காக்: தாய்லாந்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அந்நாட்டு அரசாங்கம் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி தாய்லாந்தில் வெளிநாட்டுப் பயணிகள் ஒருவேளை விபத்தில் சிக்கினால் அவர்களுக்கு 500,000 பாட் (S$18.650) மதிப்புள்ள மருத்துவ சேவைகள் வழங்கப்படும். மரணம் ஏற்பட்டால் ஒரு மில்லியன் பாட் (S$37,300) வரை இழப்பீடு வழங்கப்படும்.
வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்புக்காக இந்தப் புதிய இயக்கத்தைத் தாய்லாந்து அரசாங்கம் தொடங்கியிருக்கிறது.
பயணத்துறை, விளையாட்டு, பொதுச் சுகாதாரம் ஆகிய அமைச்சுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டுள்ள இயக்கம், தாய்லாந்தில் உள்ள வெளிநாட்டுப் பயணிகள் நன்கு கவனித்துக் கொள்ளப்படுவார்கள் என்பதை நோக்கமாகக் கொண்டது என்று சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுடவான் வாங்சுபாகிஜ்கோசோல் பிரசாரம் தொடங்கப்பட்ட பிப்ரவரி 14ஆம் தேதியன்று தெரிவித்தார்.
உலகளாவிய விடுமுறைத் தலமாக தாய்லாந்தின் தோற்றத்தை மாற்றுவதே இதன் இலக்கு என்றார் அவர்.
இதற்காக அமைச்சு ஐம்பது மில்லியன் பாட் நிதியை ஒதுக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சின் அவசரச் செலவுகளுக்கான நிதியிலிருந்து புதிய இயக்கக்கத்திற்கு செலவழிக்கப்படும்.
2024ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை தாய்லாந்தில் பயணம் செய்யும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒவ்வொரு சம்பவத்தின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும்.
ஒருவருக்கு மரணம் ஏற்பட்டால் அதிகபட்சமாக ஒரு மில்லியன் பாட் வரை இழப்பீடு வழங்கப்படும். நிரந்தர கண்பார்வை இழப்பு உள்ளிட்ட உறுப்புச் செயலிழப்புகளுக்கு ஒருவருக்கு 300,000 பாட் வரை மருத்துவப் பாதுகாப்பு இருக்கும். மருத்துவ செலவுகள் அதற்கு ஆகும் செலவுகளுக்கு ஏற்ப அதிகபட்சமாக 500,000 பாட் வரை இருக்கும்.