புக்கெட்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 15) காற்றின் தரம் மிக மோசமாக இருந்தது. காற்றுத் தூய்மைக்கேட்டால் அந்நகரம் திணறியது.
இதனையடுத்து, பிப்ரவரி 15,16 என இரு நாள்களுக்கு ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறும் அந்நகர ஆளுநர் சட்சார்ட் சிட்டிபுன்ட் கேட்டுக்கொண்டார்.
ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று முதலாளிகளையும் நிறுவனங்களையும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். வீட்டில் இருந்து வேலை செய்வதன் மூலம் 11 மில்லியன் மக்கள் காற்று தூய்மைக்கேட்டில் இருந்து தப்பமுடியும் என்று அவர்கள் கூறினர்.
இந்நிலையில், காற்றுத்தரம் வெள்ளிக்கிழமையும் மோசமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரத்தை கண்காணிக்கும் ‘ஐகியூஏர்’ இணையத்தளம் பேங்காக் நகரில் காற்றுத் தரம் ஆக மோசமாக உள்ளது என்று குறிப்பிட்டது.
உலகச் சுகாதார நிறுவனம் குறிப்பிட்ட அளவைவிட காற்றில் ஆபத்தான துகள்கள் 15 மடங்கு அதிகமாக இருப்பதாக ‘ஐகியூஏர்’ இணையத்தளம் கூறியது.