பெய்ஜிங்: சீன நகரமான சுஸோவில் உள்ள ஒரு விரைவுச்சாலையில் 100க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாகச் சீன அரசு ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
அந்த வாகனங்கள் சாலையில் குவிந்து கிடப்பதையும் அவற்றில் ஒரு வாகனம், இன்னொரு வாகனத்தின் மீதேறி செங்குத்தாக நிற்பதையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட படங்கள் காட்டின.
கடந்த சில வாரங்களாக, சீனாவின் பல பகுதிகள் கடுங்குளிர், பனிப்புயல், பனிக்கட்டி மழை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
மில்லியன்கணக்கான மக்கள், சீனப் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாட வீட்டிற்குத் திரும்பும் நேரத்தில் இந்தக் கடுமையான வானிலை அவர்களுடைய பயணத்தைப் பாதித்துள்ளது.
பெய்ஜிங், ஹெபெய், ஷாங்ஸி உள்ளிட்ட நகரங்களில் உறையவைக்குள் குளிரை எதிர்கொள்வதற்கான அவசரகால நடவடிக்கைகளை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது.
அத்துடன், போக்குவரத்து, அத்தியாவசியப் பொருள்கள், மின்சாரம் ஆகியவற்றுக்கான பல திட்டங்களையும் அது தொடங்கியுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.