காஸாவில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு விரைவாக உதவி வழங்க உடனடி மனிதநேய போர்நிறுத்தத்துக்கு சிங்கப்பூர் ஆதரவளிக்கிறது.
இதை ஜி-20 நாடுகள் கூட்டத்தில் தெரிவித்த பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான், பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக, நிபந்தனையற்ற, பாதுகாப்பான முறையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.
இரண்டாம் வெளியுறவு அமைச்சராகவும் விளங்கும் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான், பிப்ரவரி 21, 22ஆம் தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் சிங்கப்பூரின் நிலைப்பாட்டை மேற்கண்டவாறு விளக்கினார்.
காஸாவில் நிலவும் சூழ்நிலை வேதனையளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, எகிப்துக்கு அருகிலுள்ள காஸாவின் தெற்குப் பகுதி நகரான ராஃபாவில் 1.4 மில்லியன் பாலஸ்தீனர்கள் தஞ்சம் புகுந்துள்ள நிலையில் அங்கு இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
காஸாவில் இதுவரை கிட்டத்தட்ட 30,000 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை தொடரும் வேளையில் இது அனைத்துலக அளவில் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது.

