பாரிஸ்: பிரான்சின் தலைநகர் பாரிசில் நடைபெறும் முக்கிய விவசாயக் கண்காட்சியில் கலந்துகொள்ளவிருக்கும் அதிபர் இமானுவெல் மேக்ரோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை (பிப்ரவரி 24) போராட்டம் நடத்த விவசாயிகள் தயாராகிவருகின்றனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகலில் 20க்கு மேற்பட்ட டிராக்டர்களில் ஒலிப்பான்களை அலறவிட்டபடி அவர்கள் தலைநகரைச் சென்றடைந்தனர்.
ஒரு டிராக்டரில், “மேக்ரோன், நீங்கள் புயலுக்கான விதைகளை விதைக்கிறீர்கள், என்ன அறுவடை செய்யப்போகிறீர்கள் என்பது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்,” எனப் பொருள்படும் வாசகம் காணப்பட்டது.
ஐரோப்பா முழுவதிலுமுள்ள விவசாயிகள், மேம்பட்ட வருமானம், ஆளும் வர்க்கத்தின் தலையீடு குறைவாக இருத்தல் போன்றவை தொடர்பில் போராட்டம் நடத்திவருகின்றனர்.
உக்ரேனிலிருந்து மலிவான விலையில் பொருள்கள் சந்தைக்கு வருவதால் நியாயமற்ற போட்டித்தன்மை ஏற்பட்டிருப்பதாக அவர்கள் புகார்கூறுகின்றனர். ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து உக்ரேனிய இறக்குமதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வரி விலக்கு அளித்துள்ளது.
விவசாயிகள் சிலர், அதிபர் மேக்ரோன் கண்காட்சி அரங்கில் நுழைவதைத் தடுக்கத் திட்டமிட்டுள்ளதாக ராய்ட்டர்சிடம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக சனிக்கிழமை இக்கண்காட்சியில் விவசாயிகள், உணவைப் பதப்படுத்தும் நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளர்களுடன் பேச்சு நடத்த அதிபர் மேக்ரோன் திட்டமிட்டிருந்தார். விவசாயிகள் சங்கத்தினர் இதில் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்ததால் அதிபர் அக்கலந்துரையாடலை ரத்து செய்துவிட்டார்.
ஒன்பது நாள் நடைபெறும் பாரிஸ் விவசாயக் கண்காட்சியில் 600,000 பேர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.