மணிலா: மீனவர்களுக்கு பொருள்களை கொண்டு சென்ற பிலிப்பீன்ஸ் கப்பலை சீனாவின் கடலோரக் காவல்படை தடுக்க முயன்றதாக பிலிப்பீன்ஸ் அரசாங்கம் பிப்ரவரி 25ஆம் தேதியன்று குற்றம்சாட்டியுள்ளது.
இது, சர்சைக்குரிய பகுதியில் இரண்டு வாரங்களில் நடந்துள்ள இரண்டாவது சம்பவமாகும்.
பிப்ரவரி 22ஆம் தேதியன்று ‘பிஆர்பி டத்து சாண்டே’ என்ற கப்பல் ஸ்கார்பருக் ஷோலுக்கு அருகே மீனவர்களுக்கு எரிபொருளை விநியோகம் செய்துகொண்டிருந்தது. அப்போது சீனக் கடலோரக் காவல்படை கப்பல் மற்றும் மூன்று சீனக் கப்பல்கள் இடையூறுகள் செய்ததாக பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல்படை தெரிவித்தது.
நான்கு சீனக் கப்பல்களில் மூன்று, ‘டத்து சாண்டே’க்கு நெருக்கமாக 100 மீட்டர் சுற்றுவட்டாரத்துக்குள் வந்தன. அபாயகரமான வகையில் அவை நகர்ந்து சென்றன என்று பிலிப்பீன்ஸ் கூறியது.
“சீன கப்பல்கள் அபாயகரமாக நடந்துகொண்டாலும் ‘பிஆர்பி டத்து சாண்டே’ கப்பலின் தலைவர் திறமையாகச் செயல்பட்டதால் தடுப்பு முயற்சிகளை தவிர்க்க முடிந்தது,” என்று தென் சீனக் கடல் விவகாரங்களுக்கான பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல்படையின் பேச்சாளர் ஜே டாரியேலா தெரிவித்தார்.
ஒரு வாரத்திற்கு முன்பு இதே பகுதியில் இதே போன்ற மோதலை எதிர்கொண்டதாக பிலிப்பீன்ஸ் அரசாங்கம் கூறியிருந்தது.
2012ல் ஸ்கார்பருக் ஷோலை சீனா கைப்பற்றியதிலிருந்து இரு நாடுகளுக்கு இடையே சச்சரவு நிலவி வருகிறது. அப்போதிருந்து, பெய்ஜிங் சுற்றுக் காவல் படகுகளை அங்கு நிறுத்திவைத்துள்ளது.

