வெலிங்டன்: வருங்காலத் தலைமுறையினருக்கு புகையிலை விற்பனையைத் தடை செய்யும் உலகின் முதல் சட்டத்தை ரத்து செய்வதாக நியூசிலாந்து அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 27) தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் நடப்புக்கு வரவிருந்த அச்சட்டம், 2009ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்களுக்குப் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதைத் தடுத்திருக்கும்.
மேலும், புகைபிடிக்கப் பயன்படுத்தப்படும் புகையிலைப் பொருள்களில் உள்ள நிக்கோடின் அளவைக் குறைக்கவும், புகையிலைப் பொருள்களை விற்கும் சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கையை 90 விழுக்காட்டிற்குமேல் குறைக்கவும் அது வகை செய்திருக்கும்.
கடந்த அக்டோபரில் பதவிக்கு வந்த கூட்டணி அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்தபடி அந்தச் சட்டத்தை ரத்து செய்வதாகவும் அதுகுறித்துப் பொதுமக்களிடம் கருத்துத் திரட்டப்படமாட்டாது என்றும் கூறியது.
புகைபிடித்தலைக் குறைப்பதற்கு கூட்டணி அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதாக சுகாதார இணை அமைச்சர் கேசி கொஸ்டெல்லோ தெரிவித்தார்.
இருந்தபோதும், புகைபிடித்தலையும் அதனால் ஏற்படும் பாதிப்பையும் குறைப்பதற்கு மாற்று அணுகுமுறையைக் கையாளவிருப்பதாக அவர் கூறினார்.