பெய்ஜிங்: லஞ்சமாகப் பெற்ற பணத்தைக் கொண்டு ஓய்வுபெற்ற சீன அதிகாரி ஒருவர் 13 வீடுகளை வாங்கிய விவகாரம் சீனாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
உயர்மட்ட ஊழல் தடுப்பு அதிகாரி ஒருவர் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தினார்.
சீனாவின் வடமேற்கு மாநிலமான ஷான்ஸியைச் சேர்ந்த முன்னாள் வனத்துறை அதிகாரியான ஹி ஃபாலி, 2017ல் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் சொத்துகளை வாங்கினார்.
ஏறக்குறைய 40 மில்லியன் யுவான் (S$7.5 மி.) மதிப்பில் லஞ்சம் பெற்றதற்காக 2022ல் அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் விவகாரமாக இது உருவெடுத்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி, வெய்போவில் மில்லியன் கணக்கான பார்வைகளை இது பெற்றுள்ளது.
இதுகுறித்து பலரும் கேலியான கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர், “அவரால் 130 வீடுகளை வாங்கியிருக்க முடியும்,” என்றார்.
இப்போது 70 வயதாகும் ஹி, 2003ல் ஷான்ஸியின் சுற்றுச்சூழல் பிரிவுத் தலைவரானார்.