வியன்னா: ஆஸ்ட்ரியாவில் தனது மகனை சிறிய நாய்க்கூண்டில் அடைத்துவைத்து, பட்டினிபோட்டுக் கொடுமைப்படுத்திய 33 வயதுப் பெண்ணுக்கு 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரை மகனைப் பல சம்பவங்களில் அவர் அடித்ததாகக் கூறப்பட்டது. அப்போது அச்சிறுவனுக்கு வயது 12.
அவ்வாறு அடித்தது, பட்டினி போட்டது, நாய்க்கூண்டில் அடைத்து வைத்தது, மிகவும் குளிர்ந்த நீரை சிறுவன்மேல் ஊற்றியது ஆகியவை தொடர்பில் பிப்ரவரி 26ஆம் தேதி அப்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஆஸ்ட்ரியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள கிரெம்ஸ் நகர நீதிமன்றம், அப்பெண் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என்று பிப்ரவரி 29ஆம் தேதி தீர்ப்பளித்தது. அவற்றில் கொலை முயற்சிக் குற்றச்சாட்டும் அடங்கும்.
இக்குற்றங்களில் உடந்தையாக இருந்த அப்பெண்ணின் 40 வயதுத் தோழிக்கும் 14 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாயின் கொடிய செயல்களை அத்தோழி தூண்டிவிட்டதாகக் கூறப்பட்டது.