பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரா அந்நாட்டின் செல்வாக்குமிக்க அரசியல்வாதி என ஓர் ஆய்வு கூறுகிறது.
தாய்லாந்தின் தேசிய வளர்ச்சி நிர்வாக கழகம் அந்த ஆய்வை நடத்தியது. ஆய்வில் 1,310 பேர் கலந்து கொண்டதாகவும் அதில் கிட்டத்தட்ட 22 விழுக்காட்டினர் தக்சினை தேர்வு செய்ததாகவும் கழகம் தெரிவித்தது.
இரண்டாவது இடத்தில் தற்போதைய பிரதமர் சிரேத்தா தவிசின் உள்ளார். அவரை 17.4 விழுக்காட்டினர் தேர்வு செய்தனர்.
பிரதமர் சிரேத்தா ஆட்சி அமைக்க தக்சினின் ஆதரவு மிக முக்கியமான ஒன்றாக இருந்தது.
கடந்த மாதம் திரு தக்சின் வயது மூப்பு, உடல் நலக்குறைவு போன்ற காரணங்களால் தடுப்பு காவலில் இருந்து சிறப்பு பரோல் மூலம் விடுவிக்கப்பட்டார்.
இரண்டு முறை தாய்லாந்து பிரதமராக இருந்த திரு தக்சின் 15 ஆண்டுகள் நாட்டை விட்டு வெளியே இருந்தார். அவர் கடந்த ஆண்டு நாடு திரும்பினார். ஊழல் செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த பொதுத் தேர்தலில் தனி கட்சியாக அதிக தொகுதிகள் வென்ற மூவ் ஃபார்வட் கட்சியின் முன்னாள் தலைவர் பிட்டா லிம்ஜாரோன்ராட் செல்வாக்குமிக்க அரசியல்வாதி பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார். அவருக்கு 15.1 விழுக்காட்டினர் ஆய்வில் ஆதரவு தெரிவித்தனர்.
ஆய்வை தொலைபேசி வழியாக பிப்ரவரி 27, 28, 29ஆம் தேதிகளில் தேசிய வளர்ச்சி நிர்வாக கழகம் நடத்தியதாகத் தெரிவித்தது.