பெய்ஜிங்: சீனாவில் சன்யாவில் இருந்து பெய்ஜிங்கிற்கு கடந்த புதன்கிழமை சைனா சௌதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
விமான இயந்திரத்திற்குள் பயணி ஒருவர் காசுகளை வீசியதே அதற்குக் காரணம் என்று சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
காசுகளை வீசியதாகச் சந்தேகிக்கப்படும் பயணியிடம் விமானச் சிப்பந்தி ஒருவர் விசாரிப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்தது.
அடையாளம் தெரியாத அந்தப் பயணி, விமான இயந்திரத்திற்குள் மூன்று முதல் ஐந்து காசுகள் வரை வீசியதை ஒப்புக்கொண்டார். அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தாம் இச்செயலைப் புரிந்ததாக அவர் கூறினார்.
அவரது மூடநம்பிக்கையான செயலால் காலை 10 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம், தாமதமாக பிற்பகல் 2.16 மணிக்குப் புறப்பட்டது. பொறியாளர்கள் முழுமையான பாதுகாப்புப் பரிசோதனை மேற்கொண்ட பிறகே விமானம் புறப்பட்டது.
சம்பந்தப்பட்ட பயணியின் பொறுப்பற்ற செயலை சைனா சௌதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சாடியது.