ஜகார்த்தா: சிங்கப்பூரில் நடக்கும் டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சியைக் காண இந்தோனீசியர்கள் பலர் சிங்கப்பூருக்கு வருகின்றனர்.
இதனால், இந்தோனீசியாவின் விமான நிறுவனமான கருடா மூலம் சிங்கப்பூருக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளதாக ‘ஜகார்த்தா போஸ்ட்’ நாளிதழ் வெள்ளிக்கிழமை (மார்ச் 8) தெரிவித்தது.
டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சி நடக்கும் நாள்களில் இந்தோனீசியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளதாக கருடா நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு இர்ஃபான் செட்டியபுத்ரா வியாழக்கிழமையன்று (மார்ச் 7) தெரிவித்தார்.
பெரும்பாலானோர் ஜகார்த்தா, பாலி ஆகிய இடங்களிலிருந்து பயணம் செய்ததாகவும் சுரபாயாவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
“சுவிஃப்ட் இசைநிகழ்ச்சிகள் கணிசமான இந்தோனீசிய பார்வையாளர்களை ஈர்த்துள்ளன. குறிப்பாக, புதுமையான அனுபவங்களைப் பெறவும் தங்கள் சமூக ஊடக கணக்கை மேம்படுத்தவும் துடிக்கும் இளையர் சமூகத்தை இந்த நிகழ்ச்சி கவர்ந்துள்ளது,” என திரு இர்ஃபான் குறிப்பிட்டார்.