கோலாலம்பூர்: தொப்புள் கொடியோடு ஆண் குழந்தை ஒன்று, மார்ச் 9ஆம் தேதியன்று மலேசியாவின் ஸ்ரீ பெட்டாலிங் பகுதியிலுள்ள கூட்டுரிமைக் கட்டடம் ஒன்றிலிருந்து கீழே தூக்கி எறியப்பட்டதில் அது மரணமடைந்தது.
குழந்தை உயர்மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்றும் அந்த சிசுவின் தலையின் ஒரு பகுதி சிதைந்த நிலையில் இருந்தது என்றும் பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்படைத் தலைவர் கூ மஷரிமான் தெரிவித்தார்.
இன்னும் தொப்புள் கொடி இணைக்கப்பட்ட நிலையில் அந்தக் குழந்தை இருந்ததால் தூக்கி எறியப்பட்டதற்கு முன்புதான் அது பிறந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் குழந்தையின் பெற்றோரை அடையாளம் காணவும் அல்லது சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டறியவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, சம்பவத்தைப் பார்த்ததாக நம்பப்படும் இருவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளதாகக் காவல்துறையினர் மார்ச் 10ஆம் தேதியன்று தெரிவித்தனர்.