வாஷிங்டன்: அமெரிக்காவின் நாடாளுமன்றக் கட்டடம் மீது 2021ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டோரை, தாம் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முதல் வேலையாக விடுவிப்பதாக மார்ச் 11ஆம் தேதியன்று டோனல்ட் டிரம்ப் உறுதியளித்தார்.
இவ்வாறு சிறைபிடிக்கப்பட்டவர்களை அவர் ‘பிணைக்கைதிகள்’ என்றும் குறிப்பிட்டார்.
வாக்களிப்பில் மோசடி நடந்துள்ளதாக அப்போதைய அதிபரின் கூற்றால் தூண்டப்பட்டு, திரு ஜோ பைடனுக்கு அதிகாரம் மாற்றப்படுவதைத் தடுக்க 2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதியன்று கேபிடல் கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அச்சம்பவத்தை அடுத்து 38 மாத காலத்தில் சுமார் 1,358 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நீதித் துறை கடந்த வாரம் வெளியிட்ட தகவல்கள் கூறுகின்றன.
மேலும், ஏறத்தாழ 500 பேருக்குச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.