ஜெனிவா: கடந்த நான்கு ஆண்டுகளில் உலகளவில் மற்ற எல்லா பூசல்களையும்விட காஸா போரில் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல் வந்துள்ளதென பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டுச் சபை அமைப்பின் தலைவர் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 12) தெரிவித்தார்.
“அதிர்ச்சியாக இருக்கிறது. காஸாவில் சுமார் நான்கே மாதங்களில் கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை, நான்கு ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக எல்லா உலகப் பூசல்களிலும் கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம்,” என்று திரு ஃபிலிப்பே லஸாரினி எக்ஸ் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாட்டுச் சபையின் புள்ளி விவரங்களின்படி 2019ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உலகளவில் 12,192 சிறுவர்கள் பூசல்களில் கொல்லப்பட்டதாக திரு லஸாரினி தனது பதிவில் தெரிவித்தார். அதேவேளை, சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இவ்வாண்டு பிப்ரவரி மாத இறுதி வரை காஸாவில் 12,300க்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டதாக அப்பகுதிக்கான சுகாதார அமைச்சின் தகவல்கள் குறிப்பிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
“இது சிறுவர்கள் மீதான போராகும். இது பிள்ளைப் பருவத்தையும் சிறுவர்களின் வருங்காலத்தையும் பாதிக்கும் போர்,” என்றார் திரு லஸாரினி.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதியன்று ஹமாஸ் அமைப்பு எதிர்பாரா விதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் சுமார் 1,160 பேர் மாண்டனர். அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்று இஸ்ரேல் வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்களைக் கொண்டு ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து காஸாவில் மோசமான போர் தொடங்கியது.
ஹமாஸ் கிட்டத்தட்ட 250 பேரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தது. நவம்பர் மாதம் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது அவர்களில் பலர் விடுவிக்கப்பட்டனர்.
ஏறத்தாழ 130 பேர் இன்னமும் காஸாவில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் நம்புகிறது. 32 பேர் மாண்டுவிட்டதாக நம்பப்படுகிறது.
ஹமாஸ் தாக்குதலுக்குப் பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 31,184க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். கொல்லப்பட்டோரில் பெரும்பாலோர் பெண்கள், சிறுவர்கள் என்று காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.