நேப்பிடோ: மியன்மாரின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் சிலர் அபின் உற்பத்தி மூலம் லாபம் பார்க்க முனைந்துள்ளனர்.
சென்ற ஆண்டு (2023) மியன்மார் உலகின் ஆக அதிக அபின் உற்பத்தியாளராக விளங்கியதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) கூறியது. அதுவரை அந்த நிலையிலிருந்த ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கம் அபின் வளர்ப்பைத் தடை செய்ததையடுத்து மியன்மார் அப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
2021ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு வாழ்வாதாரத்திற்குப் போராடிவரும் மியன்மார் விவசாயிகள், பணப்பயிராகக் கருதப்படும் அபினை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அபின் செடிகளிலிருந்து ‘ஹெராயின்’ தயாரிக்கப்படுவதால் அவற்றை வளர்ப்பதன்மூலம் விவசாயிகளுக்கு லாபம் கிட்டுகிறது.
மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் அபின் செடிகளைப் பயிரிட்டால் கிட்டத்தட்ட 16 கிலோ அபின் ‘பிசின்’ கிடைக்கும் என்றும் அது ஏறக்குறைய $4,500 அமெரிக்க டாலர் (S$6,000) ஈட்டித்தரும் என்றும் கூறப்படுகிறது.
எனவே, அரிசி, சோளம் போன்றவற்றைப் பயிரிட்ட விவசாயிகளின் கவனம் அபின் பக்கம் திரும்பியுள்ளது.
மியன்மார் சென்ற ஆண்டு, 1,080 மெட்ரிக் டன் அபினை உற்பத்தி செய்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அது அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.