பேங்காக்: தாய்லாந்தில் பொழுதுபோக்குக்கென கஞ்சா உட்கொள்ளும் பழக்கம் சிலரிடையே இருந்து வருகிறது.
அந்தக் கலாசாரம் முடிவுக்கு வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் அத்தகையோருக்கென கஞ்சா விற்கும் பல கடைகளும் செயல்படுகின்றன. 2025ஆம் ஆண்டுக்குள் தாய்லாந்தின் வளர்ந்துவரும் கஞ்சா விற்பனைத் துறையின் மதிப்பு 1.2 பில்லியன் டாலராக (1.61 பில்லியன் வெள்ளி) இருக்கும் என்று தாய்லாந்து வர்த்தகப் பல்கலைக்கழகம் (யுனிவர்சிட்டி ஆஃப் தி தாய் சேம்பர் ஆஃப் கமர்ஸ்) கணித்துள்ளது.
எனினும், பொழுதுபோக்குக்காக கஞ்சா பயன்படுத்தப்படுவதைத் தடைசெய்ய தாய்லாந்து அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது. தடையை இவ்வாண்டிறுதிக்குள் செயல்படுத்துவது இலக்காகும்.
தடை, மருத்துவப் பயன்பாட்டுக்குப் பொருந்தாது.
பொழுதுபோக்குக்காக கஞ்சா உட்கொள்ளும் போக்கு, அதைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துடன் சென்ற மாதம் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் அந்நாட்டு சுகாதார அமைச்சர் சொல்னான் ஸ்ரீகாய் கூறியிருந்தார். இப்போக்கு தாய்லாந்தில் சிறுவர்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மற்ற வழிகளில் போதைப்பொருள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அவர் சொன்னார்.
2022ஆம் ஆண்டில் தாய்லாந்து கஞ்சா உட்கொள்வது குற்றச் செயல் அல்ல என்று வகைப்படுத்தியது. ஆசிய கண்டத்தில் தாய்லாந்துதான் அவ்வாறு செய்த முதல் நாடாகும்.
அதனைத் தொடர்ந்து அந்நாட்டில் கஞ்சா கலாசாரம் செழிப்படையத் தொடங்கியது. தாய்லாந்தின் பல இடங்களில் கஞ்சா வெளிப்படையாக விற்கப்படுகிறது. பல்வேறு வகையான கஞ்சா, கடைகள், மதுபானக் கூடங்கள், விளையாட்டுக் கூடங்கள் போன்றவற்றில் விற்கப்படுகின்றன.
கஞ்சாவைக் கருப்பொருளாகக் கொண்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் அதிகம் நடைபெற்று வருகின்றன.
பொழுதுபோக்குக்காக கஞ்சா பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டத்தின் வடிவம் இம்மாத இறுதியில் நாடாளுமன்ற ஒப்புதலுக்காக முன்வைக்கப்படும்.