ஒட்டாவா: கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ‘சந்தேகத்திற்குரிய’ வகையில் வீடு ஒன்று தீப்பற்றியதில் அங்கு வசித்த இந்திய வம்சாவளி தம்பதியரும் அவர்களின் பதின்ம வயது மகளும் உயிரிழந்தனர்.
காவல்துறையினர் மார்ச் 15ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையின்படி, பிரம்ப்டன் பகுதியிலுள்ள வீடு ஒன்று தீக்கு இரையானதாகக் கூறப்படுகிறது.
நெருப்பு அணைக்கப்பட்ட பிறகு, மனித எச்சங்கள் சாம்பலான வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.
இருப்பினும், தீச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உறுதிபடுத்தப்படவில்லை.
எரிந்த மனித எச்சங்களில், மூன்று குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டனர். 51 வயது ராஜிவ் வரிக்கூ, 47 வயது ஷில்பா கோத்தா, அவர்களின் 16 வயது மகள் மஹிக் வரிக்கூ ஆகியோர் தீச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள்.
இதற்கிடையே, இந்தத் தீச்சம்பவம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தற்செயலாக மூண்ட தீ அல்ல என்று கூறப்படுகிறது.
உயிரிழந்த குடும்பம் சுமார் 15 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வந்ததாகவும் அவர்களுக்குப் பிரச்சினை இருந்ததாகத் தெரியவில்லை என்றும் அண்டைவீட்டார் ஒருவர் கூறினார்.