வெலிங்டன்: நியூசிலாந்துடனான தொடர்புகளை வலுப்படுத்தவும் வட்டாரத்தில் அமைதி, நிலைத்தன்மையைக் கட்டிக்காக்கவும் விரும்புவதாகச் சீனா தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் இருவரும் திங்கட்கிழமை (மார்ச் 18) சந்தித்தபோது அவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
நியூசிலாந்தில் கடந்த அக்டோபர் மாதம் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைத்த பிறகு இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை.
அனைத்துலக, வட்டார விவகாரங்கள் தொடர்பில் நியூசிலாந்துடன் உத்திபூர்வத் தொடர்புகளை வலுப்படுத்த சீனா விரும்புவதாகத் திரு வாங் யி கூறினார்.
உளவுத் தகவல் பரிமாற்றத்துக்கான ‘ஃபைவ் ஐஸ்’ கூட்டணியில் நீண்டகாலமாகவே நியூசிலாந்து, சீனா குறித்து அதிகம் கருத்துரைத்ததில்லை. அண்மைக்காலமாக அது, சீனாவின் நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையாகக் கருத்துரைத்து வருகிறது.
சீனா, நியூசிலாந்தின் முன்னணி வர்த்தகப் பங்காளியாக விளங்குகிறது. முன்னர் நிலவிய தொடர்புகளை மேம்படுத்த இந்தச் சந்திப்பு உதவும் என்று அமைச்சர் பீட்டர்ஸ் கூறினார்.
“இரு தரப்பும் எதிர்நோக்கும் சவால்கள், வாய்ப்புகள் குறித்துக் கலந்துரையாட இது நல்ல வாய்ப்பு,” என்றார் அவர்.
திரு வாங், நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டோஃபர் லக்ஸனையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை அவர் ஆஸ்திரேலியா சென்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்கையும் வர்த்தகத் தலைவர்களையும் சந்திப்பார்.