காஸாவில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவ புனித ரமலான் நோன்பு காலத்தில் நன்கொடை திரட்ட சிங்கப்பூர் அறநிறுவனம் ஒன்று முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த நோக்கத்திற்காக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் குழந்தைகளுக்கான நிதியமான யுனிசெஃப்புடன் பங்காளித்துவம் செய்துள்ளது ரஹ்மத்தான் லில் அலாமின் அறக்கட்டளை (ஆர்எல்ஏஎஃப்) என்னும் அந்த அறநிறுவனம்.
காஸாவில் சிரமப்படும் மக்களுக்கு உதவிகள், நிவாரணம் மற்றும் உறைவிடத்தை அளிக்க நிதி வழங்குமாறு அறநிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
“கிட்டத்தட்ட 1.7 மில்லியன் பேர், அதாவது காஸாவின் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்புக்காக இடம்பெயர்ந்துவிட்டனர். அவர்களில் பாதிப்பேர் குழந்தைகள். பாதுகாப்பான பகுதிகளும் தங்குவதற்கான இடங்களும் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. அவர்களில் பலர் இறந்துவிட்டதாக காஸாவில் தகவல் வெளியாகி உள்ளது.
“அத்துடன், பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் காயங்களால் அவதியுறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது,” என்று ஆர்எல்ஏஎஃப் அறநிறுவனம் செவ்வாய்கிழமை (மார்ச் 19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
மார்ச் 20 முதல் மார்ச் 26 வரை பல்வேறு இணையத்தளங்கள் மூலம் நன்கொடை வழங்குமாறு அது கோரிக்கை விடுத்துள்ளது. பேநவ், வங்கி மூலம் பணமாற்றம், காசோலை, Giving.sg இணைய இயக்கம் ஆகியவற்றின் மூலம் நன்கொடை அளிக்கலாம். நேரடியாக பள்ளிவாசல்களில் அமைக்கப்பட்டுள்ள நன்கொடைப் பெட்டிகளில் நன்கொடையை வழங்கலாம்.
ஆனால், இந்த நேரடி நன்கொடை திரட்டு மார்ச் 22ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மட்டுமே நடைபெறும் என்று அறநிறுவனம் தெரிவித்து உள்ளது.