தைப்பே: அதிபர் சாய் இங்-வென் தென்சீனக் கடற்பகுதிக்குத் தற்போது செல்வதைத் தவிர்க்க வேண்டுமென, மார்ச் 21ஆம் தேதி, தைவானின் பாதுகாப்பு உயரதிகாரி கூறியுள்ளார்.
அந்த வட்டாரத்தில் சீன ராணுவத்தின் இருப்பைச் சுட்டிய அவர், சம்பந்தப்பட்ட நாடுகளின் இடையூறுகளால் அதிபர் பயணம் செய்யும் விமானத்தின் பாதுகாப்புக்குப் பங்கம் நேரலாம் என்றார்.
தைவான், சீனா இரண்டுமே தென்சீனக் கடலின் பெரும்பாலான பகுதிக்கு உரிமை கோருகின்றன.
சர்ச்சைக்குரிய ஸ்ப்ராட்லி தீவுகளில் ஒரு முக்கிய தீவுத்திட்டு மட்டுமே தைவானின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தைவானின் தற்போதைய அதிபரான திருவாட்டி சாய், மே மாதம் பதவியிலிருந்து ஓய்வுபெறுகிறார். அதற்குமுன் அவர் அந்தக் கடற்பகுதிக்குச் செல்லவேண்டுமென ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தைவானின் இறையாண்மையை உறுதி செய்யவும், பெரிய கப்பல்களுக்கு சேவை வழங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட துறைமுகத்தைப் பார்வையிடவும் அதிபர் சாய் அங்கு செல்லவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
அவருக்கு முன்னர் தைவானின் அதிபராக இருந்தவர்கள் சர்ச்சைக்குரிய அந்தப் பகுதிக்குச் சென்றதுண்டு. ஆனால் திருவாட்டி சாய் தமது அதிபர் பதவிக்காலத்தில் இதுவரை அங்கு செல்லவில்லை.
இந்நிலையில், தென் சீனக் கடலில் பன்னாட்டு ராணுவத்தினர் அதிகமாகக் காணப்படுவதைச் சுட்டிய தைவான் தேசியப் பாதுகாப்புப் பிரிவின் தலைமை இயக்குநர்-ஜெனரல் சாய் மிங்-யென், அத்தகைய பயணத்தை அனைத்துலகச் சமூகம் எப்படி எடுத்துக்கொள்ளும் என்பதையும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றார்.