பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் டாமான்சராவில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் பாதுகாவலராக வேலைபார்க்கிறார் நேப்பாளியான ஷெர்பா தவா, 36.
ஏ5 செக்யூரிட்டி சர்விசஸ் நிறுவனத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலைபார்க்கும் இவர், கடந்த புதன்கிழமை (மார்ச் 20), கார் நிறுத்துமிடத்தில் பணப்பெட்டி ஒன்றைக் கண்டெடுத்தார். உடனடியாக அதைக் காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
10, 50, 100 ரிங்கிட் மதிப்பிலான பணத்தாள்கள் அப்பெட்டியில் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு 500,000 ரிங்கிட்டிற்குமேல் (கிட்டத்தட்ட S$142,365) என்று கூறப்பட்டது.
ஷெர்பா தவாவின் நேர்மையைப் பாராட்டிய அவரது நிறுவனம், அவருக்கு விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
நிறுவனத்தின் இயக்குநர் ஹர்தீப் சிங் ஜஸ்வந்த், விருதுடன் அன்பளிப்பையும் தவாவிடம் வழங்கினார்.
தவாவின் அர்ப்பணிப்பு உணர்வு பெருமைக்குரியது என்று நிறுவனம், சனிக்கிழமை (மார்ச் 23) ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
எனது கடமையைத்தான் செய்தேன் என்கிறார் தவா.
“பணப்பெட்டியைப் பார்த்ததும் நான் பயப்படவில்லை. ஏனெனில் நிறுவனம் எங்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறது. அதன்படி செயலாற்ற வேண்டியது எனது பொறுப்பு என்பதை நான் அறிவேன். பணப்பெட்டியில் இருந்த தொகை பற்றியெல்லாம் நான் சிந்திக்கவில்லை,” என்று அவர் கூறினார்.