பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின்பிங், புதன்கிழமை (மார்ச் 27) அமெரிக்க அதிகாரிகளையும் கல்விமான்களையும் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமண்டபத்தில் சந்தித்ததாக சீன அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சென்ற ஆண்டு நவம்பரில் சான் ஃபிரான்சிஸ்கோவில் அமெரிக்க அதிகாரிகளுடன் அதிபர் ஸி விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டது நினைவுகூரத்தக்கது.
புதன்கிழமை சந்திப்பு, காலை 11 மணிக்குத் தொடங்கியதாகவும் அனைவரும் குழுவாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து வெளியான காணொளியில், சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் சதுர வடிவில் அமர்ந்திருந்ததைக் காட்டியது.
மக்கள் மாமண்டபத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் அறையில் இச்சந்திப்பு நிகழ்ந்தது.
அமெரிக்கக் காப்பீட்டு நிறுவனமான ‘சப்’பின் தலைமை நிர்வாகி இவான் கிரீன்பெர்க், அமெரிக்க-சீன உறவுகளுக்கான தேசியக் குழுவின் தலைவர் ஸ்டீஃபன் ஆர்லின்ஸ், அமெரிக்க-சீன வர்த்தக மன்றத் தலைவர் கிரெக் ஆலன் போன்றோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டதாக ராய்ட்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, மார்ச் 24, 25ஆம் தேதிகளில் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன மேம்பாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்ட வெளிநாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சீனப் பிரதமர் லி சியாங் சந்திக்கவில்லை. இதனால் சீனாவின் வெளிப்படைத்தன்மை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற இத்தகைய கருத்தரங்குகளில் சீனப் பிரதமருடன் வெளிநாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கருத்துப் பரிமாறும் வாய்ப்பு, முக்கிய அம்சமாக விளங்கியது.
இந்நிலையில், அதிபர் ஸியின் சந்திப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க-சீன வர்த்தக மன்றமும் அமெரிக்க-சீன உறவுகளுக்கான தேசியக் குழுவும் இணைந்து நவம்பரில் ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, சீன அதிபர் ஸிக்கு அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பியதாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.