சோல்: ஆஸ்திரேலியாவுக்கான தென்கொரியத் தூதர் லீ ஜோங்-சப், மார்ச் 29ஆம் தேதி பதவி விலகியதாகத் தெரிவித்துள்ளார்.
திரு லீ ஜோங்-சப், நான்கு வாரங்களுக்குமுன் ஆஸ்திரேலியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டார்.
2023ஆம் ஆண்டில் அவர் தற்காப்பு அமைச்சராக இருந்தபோது, கடற்படை வீரர் ஒருவரின் மரணம் குறித்த விசாரணையில் தவறான முறையில் தலையிட்டதாகக் கூறப்படுவதன் தொடர்பில் தற்போது அவர் விசாரிக்கப்படுகிறார்.
திரு லீயின் பதவி விலகல் குறித்து அதிபருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அதிபர் அதை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் தென்கொரிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக, தாம் தவறு ஏதும் செய்யவில்லை என்றும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்புத் தர விரும்புவதாகவும் திரு லீ கூறியிருந்தார்.
மார்ச் 10ஆம் தேதி அவர் கேன்பரா சென்றபோது, அது விசாரணையிலிருந்து தப்பும் முயற்சி என்று எதிர்க்கட்சிகள் குறைகூறின.
தூதர் பதவிக்கு அவர் பொருத்தமானவர் அல்லர் என்றும் நாட்டைவிட்டு அவர் வெளியே சென்றிருக்கக் கூடாது என்றும் ஆளுங்கட்சியினர் சிலரும் கூறினர்.
சென்ற வாரம் நாடு திரும்பிய அவர் விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்று சொன்னபோதும் எதிர்ப்புக் குரல்கள் ஓயவில்லை.
தென்கொரியாவில் ஏப்ரல் 10ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள வேளையில், திரு லீயின் பதவி விலகல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.