தி ஹேக்: காஸாவில் உடனடி மனிதநேய உதவிக்கு இடையூறு ஏதும் இல்லையென்பதை உறுதிசெய்யும்படி மார்ச் 28ஆம் தேதி, அனைத்துலக நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது.
காஸாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அது கூறியது.
ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றம் உடனடிச் சண்டை நிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுத்தபோதும் காஸாவில் போர் தொடர்கிறது. இவ்வேளையில் அனைத்துலக நீதிமன்றத்தின் ஆக அண்மைய உத்தரவு வெளிவந்துள்ளது.
“காஸாவில் அவசரமாகத் தேவைப்படும் அத்தியாவசியச் சேவைகள், மனிதநேய உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் மேற்கொள்ள வேண்டும்,” என்று அனைத்துலக நீதிமன்றம் கூறியது.
“அங்குள்ள பாலஸ்தீனர்கள் பஞ்சம் ஏற்படும் அபாயத்தை எதிர்கொள்வதாக இனியும் கூறமுடியாது. காஸாவில் பஞ்சம் தொடங்கிவிட்டது,” என்று அது குறிப்பிட்டது.
முன்னதாக, காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலையை அரங்கேற்றுவதாகத் தென்னாப்பிரிக்கா அனைத்துலக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தது. இஸ்ரேல் அதை நிராகரித்தது.
அவ்வழக்கை விசாரித்த அனைத்துலக நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம், காஸாவில் இனப்படுகொலையைத் தவிர்க்க ஆன அனைத்தையும் செய்யும்படி இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது.
காஸாவில் நிலவும் மனிதநேய நெருக்கடியைத் தளர்த்தும் வகையில் உதவிப்பொருள்களை அப்பகுதிக்குள் அனுமதிக்கும்படியும் இஸ்ரேலுக்கு அது உத்தரவிட்டது.
நான்கு வாரங்கள் கழித்து, ராஃபா நகரைத் தாக்கப்போவதாக இஸ்ரேல் அறிவித்ததை அடுத்து, கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளக் கோரிய தென்னாப்பிரிக்காவின் மனுவை அது நிராகரித்தது.
மனந்தளராத தென்னாப்பிரிக்கா, காஸாவில் பட்டினியால் மாளும் பாலஸ்தீனர்களைக் காப்பாற்றும்படி மீண்டும் மனுத் தாக்கல் செய்தது.
அதன்கீழ் அனைத்துலக நீதிமன்றம் பிறப்பித்த அண்மைய உத்தரவைத் தென்னாப்பிரிக்கா புகழ்ந்துரைத்தது. பாலஸ்தீனர்கள் தாக்குதல்களால் மட்டுமன்றி, நோய், பட்டினி ஆகியவற்றாலும் உயிரிழப்பதால் அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்று அது கூறியது.