ஜெருசலம்: காஸாவில் உடனடியாக நிகழக்கூடிய பஞ்சம் குறித்து எச்சரித்த ஐக்கிய நாட்டு அறிக்கையை இஸ்ரேல் சாடியுள்ளது.
அந்த அறிக்கையின் மதிப்பீடு தவறுகளையும் கேள்விக்குரிய ஆதாரங்களையும் கொண்டுள்ளது என்று இஸ்ரேல் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட அந்தப் பகுப்பாய்வு, காஸா மக்களில் பாதிப் பேர் “பேரழிவு” பட்டினியை எதிர்நோக்குவதாகவும் வடக்கு காஸாவில் பஞ்சம் ஏற்படக்கூடும் என்றும் கூறி அனைத்துலக அளவில் கவலையைத் தூண்டியது.
ஐக்கிய நாட்டு நிறுவனம் புள்ளிவிவரங்களின்படி, 1.1 மில்லியன் பேர், அதாவது மக்கள்தொகையில் பாதிப் பேர், மோசமான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர் என்று ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு (ஐபிசி) பங்காளித்துவம் மதிப்பிட்டுள்ளது.
ஐநா மனிதாபிமான தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ், முற்றுகையிடப்பட்ட காஸா மீது தடையற்ற உதவிகள் சென்றுசேர்வதை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
பாலஸ்தீன சிவில் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சு அமைப்பான கோகாட், “காஸாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட போரின் துரதிர்ஷ்டவசமான தாக்கங்களை இஸ்ரேல் அங்கீகரிக்கிறது,” என்று கூறியது.
ஆனால், காஸாவில் இஸ்ரேல் உணவு விநியோகத்தை செயல்படுத்தவில்லை என்றும் தினமும் வரும் உதவிகளின் அளவை ஐநா அமைப்புகளால் கையாள முடியவில்லை என்றும் அது குற்றம் சாட்டியது.
சில ஐநா அமைப்புகளுடன், குறிப்பாக அருகிலுள்ள கிழக்கில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா நிவாரணம் மற்றும் பணி அமைப்புடன் பதட்டமான உறவுகளை இஸ்ரேல் கொண்டுள்ளது, வடக்கு காஸாவில் உதவி விநியோகங்களை செய்ய இஸ்ரேல் தடை விதித்ததாக கடந்த வாரம் அந்த அமைப்பு கூறியது.
போருக்கு முன்பு காஸாவுக்கு தினசரி சராசரியாக 500 லாரிகள், அவற்றில் 150 உணவு லாரிகள், வந்தடைந்தன என்று அறிக்கையில் ஒரு வரியின் துல்லியம் குறித்தும் கோகாட் கேள்வி எழுப்பியது. ஒப்புநோக்க, போர் தொடங்கிய பிறகு ஒரு நாளைக்கு 60 உணவு லாரிகளுடன் வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
“போருக்கு முன்னர், அன்றாடம் சராசரியாக 70 லாரிகள் மட்டுமே உணவைக் கொண்டு சென்றன,” என்று வாதிட்ட கோகாட், அதற்கான ஆதாரத்தை வழங்கவில்லை.
இஸ்ரேலுக்கு வெடிகுண்டுகள், போர் விமானங்கள் அனுப்பும் அமெரிக்கா
இதற்கிடையே, அமெரிக்கா அண்மையில் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள வெடிகுண்டுகளையும் போர் விமானங்களையும் இஸ்ரேலுக்கு அனுப்ப இணக்கம் தெரிவித்தது. இதுபற்றி நன்கு அறிந்த இரண்டு வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
ராஃபாவில் எதிர்பார்க்கப்படும் இஸ்ரேலிய ராணுவத் தாக்குதல் குறித்து அமெரிக்கா பகிரங்கமாக கவலை தெரிவித்துள்ள சூழலில் மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்கா அதன் நீண்டகால நட்பு நாடான இஸ்ரேலுக்கு $3.8 பில்லியன் மதிப்பில் வருடாந்திர ராணுவ உதவி வழங்குகிறது.