தோக்கியோ: ஜப்பான், தென்கொரிய நாட்டுத் தலைவர்களை அதிபர் ஜோ பைடன் சந்திப்பதற்காக முத்தரப்புக் கூட்டத்திற்கு அமெரிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்து வருவதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வாஷிங்டனில் நடைபெறும் நேட்டோ உச்சநிலை மாநாட்டையொட்டி இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
திரு பைடன், ஜப்பானிய பிரதமர் ஃபூமியோ கிஷிடா, தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ஆகியோர் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள், வடகொரியாவின் அணுவாயுத மிரட்டல், ரஷ்யாவுடன் ராணுவ உறவுகளை பலப்படுத்தும் நாடுகள் ஆகியவை குறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கியோடோ செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தது.
ஆனால் ஜப்பானிய அரசாங்கத்தின் அரசாங்கப் பேச்சாளரான தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி, ஜூலை 9 முதல் 11 வரை நடைபெறும் நேட்டோ கூட்டத்துக்கு கிஷிடா அழைக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அமெரிக்கா, ஜப்பான், தென்கொரிய தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
தென்கொரிய அதிபர் அலுவலகம் இது குறித்து பதிலளிக்கவில்லை. ஜப்பானில் உள்ள அமெரிக்க தூதரகமும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.