மணிலா: கடும் வெப்பம் காரணமாக வீட்டில் இருந்தவாறு பாடம் நடத்தவோ வகுப்புகளை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யவோ பள்ளிகள் அனுமதிக்கப்படுவதாக பிலிப்பீன்சின் கல்வித் துறை அறிவித்துள்ளது.
கடுமையான கோடைகாலத்தில் வகுப்புகள் நடத்தப்படுவது குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் புகார்கள் அளித்ததை அடுத்து ஜூன் முதல் மார்ச் வரையிலான கல்வி ஆண்டுக்கு மாறும் நிலையிலும் பிலிப்பீன்ஸ் தற்போது உள்ளது.
மற்ற நாடுகளைப் போல், ஆகஸ்ட் தொடங்கி மே வரையிலான கல்வி ஆண்டை பிலிப்பீன்ஸ் 2020ஆம் ஆண்டில் அமல்படுத்தியது.
இதற்கிடையே, ‘எல் நினோ’ வானிலை நிகழ்வால் தென்கிழக்காசியா முழுவதும் மேலும் கடுமையான வெப்பமும் ஈரப்பதம் அதிகமில்லாத வானிலையும் நிலவி வருகின்றன.
இந்த ‘எல் நினோ’ நிகழ்வு வலுவிழந்து வந்தாலும் உலகம் முழுக்க தொடர்ந்து சராசரிக்கும் அதிகமான வெப்பநிலையை அது அதிகரிக்கச் செய்யும் என்று உலக வானிலை ஆய்வு மையம் மார்ச் 5ஆம் தேதியன்று தெரிவித்தது.
தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், மியன்மார் ஆகிய நாடுகளில் மார்ச் 17 முதல் 23 வரையிலான வாரத்தில், வெப்பநிலை ஒருசில பகுதிகளில் 40 டிகிரி செல்சியசைத் தொட்டது. மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் வெப்பநிலை குறைந்தது 35 டிகிரி செல்சியஸ் பதிவானது.
மாணவர்கள் தங்களின் உடற்பயிற்சிச் சீருடையில் பள்ளிக்குச் செல்லலாம் என்று சிங்கப்பூரில் சில பள்ளிகள் மார்ச் இறுதியில் அறிவித்தும் இருந்தன.
இருப்பினும், மலேசியாவின் பாகாங் மாநிலத்தில் 22 வயது ஆடவர் ஒருவர் வெப்பத் தாக்கத்தால் பிப்ரவரி 2ஆம் தேதி உயிரிழந்தார். மலேசியாவில் 2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வெப்பம் தொடர்பாக மேலும் 27 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.
வெப்பத்தை எதிர்கொள்ள ஒருசில பகுதிகளில் செயற்கை மழையைப் பொழிய வைக்கும் திட்டத்திலும் மலேசியா உள்ளது.
இதற்கிடையே, அதிகப்படியான வெப்பத்தால் தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றில் விவசாயமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.