பேங்காக்: தாய்லாந்து எதிர்க்கட்சியான மூவ் ஃபார்வர்ட் கட்சியைக் கலைக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் ஏப்ரல் 3ஆம் தேதியன்று ஏற்றுக்கொண்டது.
மன்னருக்கு இருக்கும் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் நாட்டில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்து வரும் மூவ் ஃபார்வர்ட் கட்சிக்கு இது பின்னடைவாக அமைந்துள்ளது.
தாய்லாந்து மன்னரை விமர்சித்ததற்காக கடந்த சில ஆண்டுகளாக குறைந்தது 260 பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சட்டத்தைத் திருத்த மூவ் ஃபார்வர்ட் கட்சி திட்டமிடுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் மன்னரை நாட்டின் தலைவராகக் கொண்டு இயங்கும் அரசாங்க முறையைக் கவிழ்ப்பதற்குச் சமம் என்றும் ஜனவரி மாதத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை மூவ் ஃபார்வர்ட் கட்சி மறுத்துள்ளது.
2023ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் மூவ் ஃபார்வர்ட் கட்சி பல தொகுதிகளைக் கைப்பற்றியது.ஆனால் அது அரசாங்கம் அமைக்க முடியாதபடி ராணுவத்துடன் சேர்ந்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடைக்கல்லாக இருந்தனர்.
இதனால் 30 விழுக்காடு தொகுதிகளைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் ஆகப் பெரிய கட்சியாக இருக்கும்போதும் மூவ் ஃபார்வர்ட் கட்சியால் அரசாங்கம் அமைக்க முடியாமல் போனது.