ஜெருசலம்: காஸாவுக்குள் மனிதாபிமான உதவிப் பொருள்களை அதிகரிக்க அமெரிக்கா கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, வடக்கு காஸா உடனான இரெஸ் எல்லையை மீண்டும் திறக்கவும் தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்டோட் துறைமுகத்தைத் தற்காலிகமாக பயன்படுத்தவும் தான் ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேல் கூறியது.
வியாழக்கிழமை இரவு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உடனான தொலைபேசி அழைப்பின்போது, காஸாவில் உள்ள மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்க “குறிப்பிட்ட, உறுதியான” நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோரினார்.
இஸ்ரேல் பதிலளிக்கவில்லை என்றால் அமெரிக்காவின் உதவி மீது நிபந்தனைகள் வைக்கப்படலாம் என்றார் அவர்.
திங்கட்கிழமை இரவு இஸ்ரேலின் தாக்குதலில் உதவி அமைப்பு ஊழியர்கள் எழுவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. அந்தத் தாக்குதல் அனைத்துலக அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளுக்கு வியாழக்கிழமை பிற்பகுதியில் நடந்த பாதுகாப்பு அமைச்சரவையின் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று ஓர் அறிக்கை கூறியது.

