மணிலா: அண்டை நாடுகளான தென்கொரியா, பிலிப்பீன்சுடன் ஒத்துழைக்கவும் வட்டாரப் பாதுகாப்பை உறுதிசெய்ய வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தாம் விரும்புவதாக ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வெள்ளிக்கிழமை கூறினார்.
“தற்போதைய பாதுகாப்புச் சூழல் கடுமையானதாகவும் சிக்கலானதாகவும் உள்ளது. வரலாற்றில் நாம் திருப்புமுனையில் இருக்கிறோம்,” என்று குழு நேர்காணல் கூட்டத்தில் திரு கிஷிடா தெரிவித்தார்.
அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் திட்டமிடப்பட்ட உச்சநிலைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக திரு கிஷிடா பேசினார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஜப்பானியத் தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார். அவ்வாறு செய்யும் இரண்டாவது ஜப்பானியத் தலைவராக அவர் விளங்குவார்.
அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான முத்தரப்பு உச்சநிலைக் கூட்டம், தென்சீனக் கடலில் அண்மையில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த கலந்துரையாடலை உள்ளடக்கியதாக இருக்கும்.
திரு பைடன் அடுத்த வாரம் திரு கிஷிடாவையும் பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரையும் சந்தித்து பொருளியல் உறவுகள் மற்றும் இந்தோ-பசிபிக் பற்றி கலந்தாலோசிக்க உள்ளார்.
இந்த உச்சநிலைக் கூட்டம் எந்த நாட்டின் மீதும் செலுத்தப்படவில்லை என்று பிலிப்பீன்ஸ் தற்காலிக வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் ஹன்ஸ் மொஹைமின் சிரிபன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார், இருப்பினும், இந்த வட்டாரத்தில் சீனாவின் அதிகரித்துவரும் ஆக்கிரமிப்பு குறித்து மூன்று நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன.
“அண்மைய சம்பவங்கள் குறித்து மூன்று நாடுகளிடையே கருத்துகளை நாம் எதிர்பார்க்கலாம்,” என்று கூறிய திரு சிரிபன், தங்களது அரசதந்திர உறவுகள் குறித்து அவை கூட்டறிக்கையை முன்வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகச் சொன்னார்.
முத்தரப்பு உச்சநிலைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக திரு பைடனும் திரு மார்கோசும் இருதரப்புச் சந்திப்பை நடத்துவார்கள் என்று திரு சிரிபன் கூறினார்.