மாபுட்டோ: அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மொஸாம்பிக் கடலோரப் பகுதியில் கவிழ்ந்தது.
இதில் 90க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி மாண்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் பலர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
சம்பவம் நிகழ்ந்தபோது அந்த மீன்பிடிப் படகில் ஏறத்தாழ 130 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த மீன்பிடிப் படகு பயணிகளை ஏற்றிச் செல்ல உகந்ததல்ல என்று தெரிவிக்கப்பட்டது.
மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டும் இதுவரை ஐந்து பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்ததாக அதிகாரிகள் கூறினர்.
அவர்களில் இருவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடல் கொந்தளிப்பாக இருப்பதால் மீட்புப் பணிகளை நடத்துவது சவால்மிக்கதாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
மொஸாம்பிக்கில் காலரா தொற்று தொடர்பாகப் பரவிய பொய்த் தகவல் காரணமாக அந்தப் பயணிகள் படகு மூலம் அங்கிருந்து தப்பிக்க முயன்றதாக அறியப்படுகிறது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து காலரா தொற்று காரணமாக மொஸாம்பிக் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்நோய் காரணமாக அந்நாட்டில் இதுவரை ஏறத்தாழ 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலரா காரணமாக மொஸாம்பிக்கில் 32 பேர் மாண்டுவிட்டனர்.