கோ சாமுய்: மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்கள் வலு இழந்து வருவதாகவும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இதுவே சரியான தருணம் என்றும் தாய்லாந்துப் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தெரிவித்துள்ளார்.
மியன்மார் மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அந்நாட்டு ராணுவம் 2021ஆம் ஆண்டில் கவிழ்த்தது.
இந்நிலையில், மியன்மாரில் மீண்டும் ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும் என்ற இலக்குடன் இருக்கும் சில அரசியல் தலைவர்களின் ஆதரவுடன் ராணுவத்துக்கு எதிராகப் பல அமைப்புகள் ஆயுதம் ஏந்தி மோதுகின்றன.
இதன் விளைவாகப் பல ராணுவச் சோதனைச்சாவடிகள், நகரங்கள் ஆகியவற்றை இந்த அமைப்புகள் கைப்பற்றியுள்ளன.
“மியன்மாரைத் தற்போது ஆட்சி செய்துவரும் ராணுவ ஆட்சியாளர்கள் வலு இழந்து வருகின்றனர். அவர்கள் தோற்றுக்கொண்டிருந்தாலும் ஆட்சி அதிகாரம் இன்னும் அவர்களது கைகளில் உள்ளது. அவர்களிடம் ஆயுதங்கள் உள்ளன. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண இதுவே நல்ல தருணம் என நம்புகிறேன்,” என்று தாய்லாந்தின் கோ சாமுய் தீவில் செய்தியாளர்களிடம் திரு ஸ்ரேத்தா கூறினார்.