கிருமி அச்சம் இருப்போர் பொதுக் கழிவறைக்குச் செல்லத் தயங்குவர்.
அத்தகைய இடத்தில் எதைத் தொட்டாலும் சிக்கல்தான் எனச் சிலர் வீட்டை அடையும்வரை காத்திருப்பதும் உண்டு.
இருப்பினும், சுயமாகச் சுத்தம் செய்துகொள்ளக்கூடிய திறன்வாய்ந்த பொதுக் கழிவறைகள் சில நாடுகளில் வழக்கமாகிவிட்டன.
அவ்வாறு தானே சுத்தம் செய்துகொள்ளும் ஆற்றல் கொண்ட ஒரு கழிவறையைக் காட்டும் காணொளி ஒன்று, எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து பலரும் தங்களின் பொதுக் கழிவறை அச்சத்தை எதிர்கொண்டுவிட்டனர்.
காணொளியில் கழிவறைக் கதவு தானே மூடிக்கொண்டதும் கழிவுத் தொட்டியும் சுவருக்குள் மடங்கிக்கொள்கிறது. தரையெங்கும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.
கழிவறை முற்றிலும் சுத்தம் செய்யப்பட்ட பிறகு நீரோட்டம் நின்றுவிடுகிறது. கழிவுத் தொட்டி மீண்டும் சுவரிலிருந்து வெளியே வருகிறது. கதவு மீண்டும் திறக்கிறது.
இந்தக் காணொளியை 26 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துவிட்டனர்.
பார்ப்பதற்கு புதுமையாக உள்ளது என்று காணொளியைப் பாராட்டினர் சிலர்.
கழிவறையில் இதையெல்லாம் கேமரா ஏன் பதிவுசெய்கிறது, கேமரா எப்போதுமே அங்கு இருக்குமா என்று கேள்வி எழுப்பியோர் பலர்!