மணிலா: தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் சீனாவின் அத்துமீறலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிலிப்பீன்ஸ் நாட்டின் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு முழக்கவரிகளைக் கொண்ட பதாகைகளை ஏப்ரல் 9ஆம் தேதி ஏந்தியதுடன் சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் உருவ பொம்மையைக் காலில் போட்டு மிதித்தனர்.
மணிலாவில் உள்ள சீனத் துணைத் தூதரகத்துக்கு ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக்கார்கள், “சீனாவே வெளியேறு” என்று குரல் எழுப்பிய வண்ணம் நடந்து சென்றனர்.
தென் சீனக் கடலில் இரண்டாவது தாமஸ் ஷோல் பகுதியில் தரைதட்டிய போர்க்கப்பலில் இருந்த ராணுவ வீரர்களுக்குப் பொருள்களைக் கொண்டு செல்லும் பிலிப்பீன்சின் விநியோகப் பணியை, மார்ச் மாதம் சீன போர்க்கப்பல் தண்ணீர் பீரங்கிகளைக் கொண்டு தடுத்து நிறுத்தியது. இதுபோன்ற கடல்துறை சார்ந்த பதற்றங்கள் சீனாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையே நடந்து வருகின்றன.
“சீன அரசாங்கத்துக்கு நாங்கள் கூறுவது இதுதான்: மேற்கு பிலிப்பீன்ஸ் கடற்பகுதியிலிருந்து வெளியேறுங்கள், உங்கள் சட்டவிரோத கட்டமைப்பை அகற்றவும், 2016 நடுவர் மன்ற தீர்ப்பை அங்கீகரிக்கவும், பிலிப்பீன்ஸ் மீனவர்களின் துன்புறுத்தலையும் பிலிப்பீன்ஸ் விநியோக பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதையும் நிறுத்துங்கள்,” என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவின் தலைவர்களில் ஒருவரான திரு மோங் பலாட்டினோ தெரிவித்தார்.
தென்சீனக் கடற்பகுதி முழுவதும் தனக்கு மட்டுமே சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் அங்கு சுற்றுக்காவல் கப்பல்களை நிறுத்தியுள்ளது. அது சீன பெருநிலத்திலிருந்து 1,000 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தென் சீனக் கடற்பகுதி முழுவதும் தனக்கு மட்டுமே சொந்தமானது என்று சீனா கூறியதற்கு, ஆதாரம் ஏதும் இல்லை என்று நிரந்தர நடுவர் நீதிமன்றம் 2016ல் தீர்ப்பளித்தது. ஆனால், சீனா அத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது என்று ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.