தோக்கியோ: ஜப்பானில் 2050ஆம் ஆண்டுக்குள் ஐந்தில் ஒரு குடும்பத்தில் வசிக்கும் முதியோர்கள் ஆதரவின்றித் தனியாக வசிப்பர் என வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) வெளியான புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தனது மூத்த குடிமக்களைத் திறம்படப் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அந்நாட்டு அரசாங்கம் தீவரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஐந்தாண்டுக்கு ஒருமுறை அந்நாட்டின் தேசிய மக்கள்தொகை, சமூகப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடும் முன்னுரைப்பில், 2050ஆம் ஆண்டுக்குள் ஜப்பானில் 10.8 மில்லியன் மூத்த குடிமக்கள் தனியாக வசிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அந்நாட்டில் வசிக்கும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கையில் இது 20.6 விழுக்காடாகும்.
அந்நாட்டு இளையர்கள் தங்கள் திருமணங்களைத் தாமதப்படுத்துவதும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதும் இதற்கு முக்கியக் காரணங்கள் என அந்த ஆய்வு முடிவுகள் குறிப்பிட்டன.