இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஆகாயத் தாக்குதலுக்கு எதிராக சிங்கப்பூர் கண்டனம் தெரிவிப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 14) கூறியது.
சிரியத் தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரானின் தூதரகத்தை இம்மாதம் ஒன்றாம் தேதியன்று இஸ்ரேல் தாக்கியதாக நம்பப்படுகிறது. அதற்குப் பதிலடியாகத் தங்களின் தாக்குதல் அமைந்ததென ஈரான் தெரிவித்தது.
ஈரானின் தாக்குதல், பதற்றநிலையை மோசமாக்குவதாகவும் ஏற்கெனவே பிரச்சினையில் இருக்கும் வட்டாரத்தை மேலும் நிலையற்றிருக்கச் செய்வதாகவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
“மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலையும் காஸா போர் வட்டார அளவிலானபூசலாக மாறக்கூடும் என்ற அச்சமும் சிங்கப்பூருக்குத் தொடர்ந்து மிகுந்த கவலை தருகின்றன,” என்று அந்தப் பேச்சாளர் சொன்னார்.
கூடுமானைவரை கட்டுப்பாட்டுடன் இயங்குமாறும் நிலைமையை மோசமடையச் செய்யும் செயல்களில் ஈடுபடாமல் இருக்குமாறும் அனைத்துத் தரப்பினரையும் சிங்கப்பூர் கேட்டுக்கொள்வதாக வெளியுறவு அமைச்சு கூறியது.
காஸாவில் தொடரும் போர் குறித்தும் பேசிய வெளியுறவு அமைச்சு, “மனிதாபிமான அடிப்படையில் உடனடிப் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்வது, நிபந்தனையின்றி உடனடியாக பிணைக்கைதிகளை விடுவிப்பது, காஸா முழுவதும் உள்ள பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குத் தடையின்றி பாதுகாப்பான முறையில் உடனடியாக மனிதாபிமான உதவி வழங்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும்,” என்று குறிப்பிட்டது.