சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள ஒரு கடைத்தொகுதியில் ஏப்ரல் 13ஆம் தேதியன்று ஆடவர் ஒருவர் கத்தியால் குத்தியதில் ஆறு பேர் மாண்டனர். தாக்குதலில் ஏறத்தாழ 12 பேர் காயமடைந்தனர்.
இது பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்றும் எந்த ஒரு சித்தாந்தத்தை முன்னிறுத்தி நடத்தப்பட்டதல்ல என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை நடத்தியவர் 40 வயது ஜொவேல் கௌச்சி என்று காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவரின் படம் தொலைக்காட்சியில் காட்டப்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் காவல்துறையினருடன் தொடர்புகொண்டனர்.
கௌச்சி தாக்குதல் நடத்தியபோது அவரைத் தடுக்க சிலர் முயன்றனர். வாடிக்கையாளர்கள் பலர் கடைகளுக்குள் புகுந்து ஒளிந்துகொண்டனர். கௌச்சி கடைகளுக்குள் நுழையாதிருக்க, அவை இழுத்து மூடப்பட்டன.
இதற்கிடையே, கௌச்சியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காவல்துறை அதிகாரி அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சிட்னி காவல்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஏமி ஸ்காட்.
அவரது துணிச்சலுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
தாக்குதல் நிகழ்ந்தபோது அவர் அந்தக் கடைத்தொகுதியில் இருந்தார்.
தாக்குதல் நடத்திய கௌச்சியை திருவாட்டி ஸ்காட் நேருக்கு நேர் எதிர்கொண்டார்.
தம்மை நோக்கி கத்தியுடன் பாய்ந்த கௌச்சியை திருவாட்டி ஸ்காட் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
கௌச்சிக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்தது தெரியவந்துள்ளது.
தாக்குதலில் மாண்ட ஆறுவரில் ஐந்து பேர் பெண்கள். காயம் அடைந்தோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒன்பது மாதக் குழந்தை ஒன்றும் அடங்கும்.
அந்தக் குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் சீராக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
குழந்தையின் தாயார் ஏஷ்லி கூட் காயங்கள் காரணமாக மருத்துவமனையில் மாண்டார்.
கத்தியுடன் கௌச்சி தம்மை நெருங்கியபோது 38 வயது திருவாட்டி கூட் அலறியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.
“குழந்தை கத்தியால் குத்தப்பட்டது. அதன் தாயாரும் கத்தியால் குத்தப்பட்டார். அப்பெண் என்னை நோக்கி வந்து தமது குழந்தையைக் காப்பாற்றும் நோக்குடன் அதை என்னிடம் வீசினார்,” என்று தாக்குதல் நடந்தபோது கடைத்தொகுதியில் இருந்த ஆடவர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.