சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய ஆடவர் பெண்களைக் குறிவைத்திருக்கக்கூடும் என்று அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போண்டை கடற்கரைக்கு அருகே இருக்கும் குடியிருப்புப் பகுதியில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் போண்டை ஜங்ஷன் கடைத்தொகுதியில் சனிக்கிழமையன்று (ஏப்ரல் 13) அந்தத் தாக்குதல் நிகழ்ந்தது. அதில் அறுவர் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமுற்றனர்.
காயமடைந்தோரில் பெரும்பாலோர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்ஃபீல்ட் போண்டை ஜங்ஷன் கடைத்தொகுதியில் நேரடி ஆதாரங்களைத் திரட்டி முடித்துவிட்டதாக திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 15) காவல்துறையினர் கூறினர்.
“குற்றவாளி பெண்களைக் குறிவைத்து ஆண்களைத் தவிர்த்தது எனக்கும் விசாரணை நடத்துவோருக்கும் தெளிவாகத் தெரிந்தது,” என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை ஆணையர் கேரன் வெப் ஆஸ்திரேலிய ஒளிபரப்பு அமைப்பிடம் (ஏபிசி) சொன்னார்.
“காணொளிகளில் தெளிவாகத் தெரிகிறது அல்லவா? நிச்சயமாக அந்தக் கண்ணோட்டத்தில் நாங்கள் விசாரணை நடத்தலாம்,” என்றார் அவர்.
தாக்குதலை நடத்திய 40 வயது ஜோவெல் கெளச்சி எனும் ஆடவர் பெண்களைக் குறிவைத்தது சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகளில் தெரிந்தது. கெளச்சி தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தபோது ஏமி ஸ்காட் எனும் காவல்துறை அதிகாரி அவரைத் தனியாக எதிர்கொண்டுக் கொன்றார்.