பெட்டாலிங் ஜெயா: இந்தோனீசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடிப்புக் காரணமாக மலேசியா, சாபா, சரவாக் ஆகியவற்றுக்கு இடையேயான விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப சில வாரங்கள் ஆகும் என மலேசிய வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும் காற்று வீசும் திசை, எரிமலை வெடிப்பின் தீவிரம் ஆகியவற்றைச் சார்ந்து விமானப் போக்குவரத்து இருக்கும் எனவும் குறிப்பாக, மே மாதம் நடுப்பகுதி வரை விமானச் சேவையில் இடையூறு ஏற்படலாம் எனவும் பருவநிலை நிபுணர் அஜிசன் அபு சாமா வியாழக்கிழமை (ஏப்ரல் 18) கூறினார்.
மேலும், தற்போது வீசும் காற்றின் திசைக்கு ஏற்ப எரிமலையின் சாம்பல் எந்த உயரத்தில், எந்தத் திசையில் பரவும் என்பதை நாம் முன்கூட்டியே கணிப்பது அவசியம் என்றார் அவர்.
“நாம் தப்போது இடைப்பட்ட பருவமழைக் காலத்தில் இருக்கிறோம். தென்மேற்குப் பருவமழை தொடங்கும் மே மாதம் வரை வானிலை தெளிவாக இருக்காது. எரிமலையிலிருந்து வெளியேறும் அடர்ந்த புகையானது காற்றில் எந்தளவு பரவும் என்பதைத் தற்போது கணிக்கமுடியாது என்பதே முக்கியப் பிரச்சினையாக உள்ளது. விமானங்களுக்குச் சேதம் அல்லது செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய கரும்புகை இருக்கும் சூழலில் விமானங்கள் பறப்பதை நாங்கள் விரும்பவில்லை,” என திரு அஜிசன் தெரிவித்தார்.