ஜகார்த்தா: இந்தோனீசியாவில் டெங்கியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுற்றுலா நகரமான பாலித் தீவுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் டெங்கி காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு பாலி வட்டார அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
டெங்கித் தடுப்பூசிகள் இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை என்றாலும் சுற்றுப்பயணிகள் தங்கள் பயணத்தின்போது ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்ய தடுப்பூசிகளைப் போட்டுகொள்ள அறிவுறுத்தப்பட்டனர், குறிப்பாக டெங்கி பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுப்பயணிகள். இதை பாலி சுகாதார நிலையத்தின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவின் செயல் தலைவர் திருவாட்டி குஸ்தி ஆயு ரக சுசந்தி சனிக்கிழமை (ஏப்ரல் 20) அன்று தெரிவித்தார்.
டெங்கிக் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியைச் சுற்றுப்பயணிகள் மட்டுமல்லாது பாலி பகுதியைச் சேர்ந்த அனைவரும் போட்டுக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டது. இதன்மூலம், டெங்கி நோய்த்தொற்றிலிலிருந்து தங்களை அவர்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும், ”என்று திருவாட்டி குஸ்தி கூறியதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
இந்தோனீசியா முழுவதும் டெங்கி பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பாலி வட்டார அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பாலி வட்டார அரசாங்கத்திடம் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை குறித்த குறிப்பிட்ட தரவுகள் எதுவும் இல்லை என்றாலும், அவ்வட்டாரத்தின் ஒட்டுமொத்த விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 4,177 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டனர் என்றும் அவர்களில் ஐவர் உயிரிழந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.