காஸா முனை: காஸா போர் தொடங்கி ஏப்ரல் 23ஆம் தேதியுடன் 200 நாள்கள் ஆகிவிட்டன.
இந்நிலையில், காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ராஃபா நகரம் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.
அங்கு ஹமாஸ் போராளிகள் பலர் இருப்பதாக அது அடித்துக் கூறுகிறது.
ஆனால், அங்கு தாக்குதல் நடத்தப்பட்டால் உயிர்ச்சேதம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று உலக நாடுகள் அஞ்சுகின்றன.
காஸாவின் பல பகுதிகளிலிருந்து வெளியேறி மில்லியன்கணக்கான பாலஸ்தீனர்கள் அங்கு தஞ்சம் அடைந்திருப்பதே இதற்குக் காரணம்.
ராஃபா மீது இஸ்ரேல் எந்நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து தெரியாமல் மனிதாபிமான அமைப்புகள் தவிப்பதாகவும் நார்வேயின் அகதிகள் மன்றத் தலைவர் யான் எஜ்லேண்ட் தெரிவித்தார்.
இதற்கிடையே, காஸா முனையில் உள்ள இரு பெரிய மருத்துவமனைகளில் பல சடலங்கள் புதைக்கப்பட்டிருந்ததாக வெளிவந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைப் பிரிவு கூறியது.
அந்த மருத்துவமனைகளை இஸ்ரேலியப் படைகள் சுற்றி வளைத்து, அதிரடிச் சோதனைகள் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.