வாஷிங்டன்: உக்ரேன், இஸ்ரேல், தைவான், இந்தோ பசிபிக் வட்டாரத்தில் உள்ள நட்பு நாடுகள் ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இனி அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அரசாங்கம் திட்டமிட்டபடி அந்த நாடுகளுக்கு நிதியுதவி வழங்கலாம்.
உக்ரேன், இஸ்ரேல், தைவான், இந்தோ பசிபிக் வட்டாரத்தில் உள்ள நட்பு நாடுகளுக்கு 95 பில்லியன் அமெரிக்க டாலர் (S$129 பில்லியன்) நிதியுதவி வழங்குவது தொடர்பான அமெரிக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மசோதாவை ஆதரித்து 79 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதை எதிர்த்து 18 பேரும் வாக்களித்தனர்.
மொத்தம் நான்கு மசோதாக்கள் ஒரு தொகுப்புத் திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டன.
ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டு வரும் உக்ரேனுக்கு ஆக அதிகமாக 61 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கப்படும்.
இஸ்ரேலுக்கும் போரால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகவும் 26 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும்.
தைவான் உட்பட இந்தோ பசிபிக் வட்டாரத்தில் உள்ள நட்பு நாடுகளுக்காக அமெரிக்கா 8.12 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கியுள்ளது.
தொகுப்புத் திட்டத்தில் இடம்பெறும் நான்காவது மசோதா, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள டிக்டாக் சமூக ஊடகத்தைத் தடை செய்ய இலக்கு கொண்டுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை உக்ரேனிடம் ஒப்படைக்கத் தேவையான நடவடிக்கைகள், ஈரான் மீது கூடுதல் தடைகள் ஆகியவை அதில் இடம்பெறுகின்றன.
இதற்கிடையே, தைவானுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து தைவானிய அதிபர் சாய் இங் வென் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தைவானுக்கு அமெரிக்கா ஆயுத ஆதரவும் வழங்கும் என்ற செய்திகள் வெளியானதை அடுத்து, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தைவானுக்கு ஆயுதங்களை விற்கக்கூடாது என்று அது வலியுறுத்தியது.