தாய்லாந்து அரசாங்கம், கடுமையான வெயில் குறித்த எச்சரிக்கையை ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கும் ஏப்ரல் 17ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், வெப்பத் தாக்கத்தால் 30 பேர் உயிரிழந்ததாக அது குறிப்பிட்டது.
வெப்ப நிலை 52 டிகிரி செல்சியசுக்குமேல் உயர்க்கூடும் என்று முன்னுரைக்கப்பட்ட நிலையில் தலைநகர் பேங்காக்கில் அதிகாரிகள் அதுகுறித்து மக்களுக்கு எச்சரித்துள்ளனர்.
ஏப்ரல் 24ஆம் தேதி பேங்காக்கில் வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியசாகப் பதிவானது. ஏப்ரல் 25ஆம் தேதியும் அதே நிலை தொடரும் என முன்னுரைக்கப்பட்டது.
பேங்காக்கில் காற்றின் ஈரப்பதம், காற்றின் வேகம் உள்ளிட்ட இதர அம்சங்களின் அடைப்படையில் மதிப்பிடப்படும் வெப்பக் குறியீடு, ‘மிகவும் அபாயகரமான’ நிலையில் உள்ளதாக சுற்றுச்சூழல் துறை கூறியது.
முதியவர்களும் உடற்பருமன் உட்பட மருத்துவச் சிக்கல் உள்ளோரும் வெளிப்புறங்களுக்குச் செல்லவேண்டாம் என்றும் கூடுதலாக நீர் அருந்தும்படியும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தெற்கு ஆசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் பல நாடுகள் கடுமையான வெப்பத் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளன.
மியன்மாரில் வெயில் கொளுத்தினாலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்தடையால் மக்கள் மின்விசிறி அல்லது குளிரூட்டும் சாதனங்களைப் பயன்படுத்த இயலாமல் தவிப்பதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியது.
பிலிப்பீன்சில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பங்ளாதேஷில் மழைக்கான வேண்டுதல்களில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
புதன்கிழமை (ஏப்ரல் 24), பங்ளாதேஷின் பள்ளிவாசல்களிலும் வயற்பகுதிகளிலும் கூடிய ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மழை வேண்டித் தொழுகை நடத்தினர்.
இன்னும் ஒரு வாரத்திற்கு கடுமையான வெப்பநிலை தொடருமென முன்னுரைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியசைத் தாண்டியதால், ஏப்ரல் 27ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 33 மில்லியன் பிள்ளைகள் பள்ளி செல்லவில்லை.