பேங்காக்: தாய்லாந்தின் நிதியமைச்சராக எரிசக்தி நிறுவன முன்னாள் நிர்வாகி பிச்சை சுன்ஹவஜிரா பொறுப்பேற்பதற்கு அந்நாட்டு மன்னர் ஒப்புதல் அளித்திருப்பதாகத் தாய்லாந்தின் அதிகாரபூர்வ அரசிதழ் ஏப்ரல் 28ஆம் தேதி அறிவித்துள்ளது.
75 வயதாகும் திரு பிச்சை, பிரதமர் ஸ்ரெத்தா தவிசினிடமிருந்து நிதியமைச்சின் பொறுப்புகளை ஏற்பார். அத்துடன் தாய்லாந்தின் துணைப் பிரதமராகவும் திரு பிச்சை பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது பிரதமர் ஸ்ரெத்தாவின் ஆலோசகராகச் செயல்படும் அவர், 2012ஆம் ஆண்டிலிருந்து பேங்சாக் கார்ப் எனும் பெட்ரோலிய நிறுவனத்தின் இயக்குநர் வாரியத் தலைவராகப் பதவி வகித்தவர்.
2014 முதல் 2017 வரை தாய்லாந்தின் மத்திய வங்கி இயக்குநர் வாரியத்தில் உறுப்பினராக இருந்த திரு பிச்சை, இவ்வாண்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தாய்லாந்துப் பங்குச் சந்தை வாரியத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
வட்டார நாடுகளுடன் ஒப்பிடுகையில் தாய்லாந்துப் பொருளியல் கடன் சுமையால் சிரமத்தை எதிர்கொள்கிறது. அது 2023ன் நான்காம் காலாண்டில் எதிர்பாரா விதமாகச் சுருங்கியதுடன் 2022ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க 2023ல் 1.9 விழுக்காடு மெதுவடைந்தது.
மொத்தம் 500 பில்லியன் பாட் செலவில், 50 மில்லியன் குடிமக்களுக்குத் தலா 10,000 பாட் வழங்குதொகை அளிக்கும் திட்டத்தைப் பிரதமர் தவிசின் அறிவித்துள்ள நிலையில், பொருளியல் வல்லுநர்களும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களும் இது சாத்தியமன்று எனச் சாடியுள்ளனர்.