அபுதாபி: அறுவை சிகிச்சை ஒன்றரை மணிநேரமாக நடந்ததை அடுத்து 63 வயது மாது ஒருவரின் கருமுட்டையிலிருந்து 30.5 கிலோகிராம் கட்டியை அபுதாபி மருத்துவர்கள் அகற்றினர்.
தற்போது அந்த நோயாளி முழுமையாகக் குணமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
வழக்கத்திற்கு மாறான அந்தக் கட்டியை வெட்டாமல் அப்படியே வெளியே எடுத்துள்ளனர் மருத்துவக் குழுவினர்.
பிலிப்பீன்சைச் சேர்ந்த வெர்ஜினியா அசன்ஷன் என்ற அந்த மாது, ஒரு ‘லிமோசின்’ வாகன ஓட்டுநர். கடுமையான இடுப்பு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் அண்மையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவர்களை நாடுவதற்கு முன்பே அவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வலியையும் அசௌகரியத்தையும் அனுபவித்து வந்துள்ளார்.
ஐக்கிய அரபு சிற்றரசுகளில் இதுவரை பதிவான ஆகப் பெரிய கட்டி இதுதான் என்று கூறப்பட்டது.
இந்தக் கட்டியை அகற்றியதன் மூலம் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் மருத்துவக் குழு புதிய மைல்கல்லை அடைந்துள்ளது என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.