மணிலா: கடும் வெப்பம் மற்றும் ஜீப்னி ஓட்டுநர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக பிலிப்பீன்ஸ் அனைத்து பொதுப் பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளை இரண்டு நாள்களுக்கு நிறுத்தி வைக்கும் என்று அந்நாட்டுக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அண்மைய வாரங்களில் தென்கிழக்காசியாவில் கடுமையான வெப்பம் சுட்டெரித்துள்ளது. இது, ஆயிரக்கணக்கான பள்ளிகள் நேரடி செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவும் சுகாதார எச்சரிக்கைகளை வெளியிடவும் அதிகாரிகளைத் தூண்டியது.
பிலிப்பீன்சில் உள்ள பல பள்ளிகளில் குளிர்சாதன வசதி இல்லை. இதனால் மாணவர்கள் நெரிசலான, ஒழுங்கான காற்றோட்டம் இல்லாத வகுப்பறைகளில் புழுங்குகின்றனர்.
கல்வித் துறை, பிலிப்பீன்ஸ் முழுவதும் 47,000க்கும் மேற்பட்ட பள்ளிகளை மேற்பார்வையிடுகிறது.
பிலிப்பீன்சில் மக்கள் பலரும் வேலைக்கும் பள்ளிக்கும் செல்வதற்குப் பயன்படுத்தும் ஜீப்னி வாகனங்களைக் கட்டங்கட்டமாக அகற்றும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில ஜீப்னி ஓட்டுநர்கள் திங்கட்கிழமை (ஏப்ரல் 29) தொடங்கி மூன்று நாளுக்கு நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தலைநகர் மணிலா அதன் அதிகபட்ச வெப்பநிலையைப் பதிவு செய்ததை அடுத்து, நேரடி வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.
மணிலாவில் சனிக்கிழமை வெப்பநிலை இதுவரை இல்லாத அளவாக 38.8 டிகிரி செல்சியசையும் வெப்பக் குறியீடு 45 டிகிரி செல்சியசையும் எட்டியதாக அரசாங்க வானிலை முன்னுரைப்பு தரவு காட்டியது.
ஞாயிற்றுக்கிழமை வெப்பமான வானிலை நீடித்தது. இடைவிடாத வெப்பத்திலிருந்து நிவாரணம் பெறுவதற்காகப் பலரும் குளிர்சாதன வசதியுடைய கடைத்தொகுதிகளிலும் நீச்சல் குளங்களிலும் திரண்டனர்.