பேங்காக்: தாய்லாந்து அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பார்ன்பிரீ பஹிடா நுகாரா பதவி விலகியுள்ளார். இந்தத் தகவலை தாய்லாந்து அரசாங்கம் ஏப்ரல் 28ஆம் தேதியன்று வெளியிட்டது.
அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது துணைப் பிரதமர் பதவியிலிருந்து திரு பார்ன்பிரீ நீக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் வெளியுறுவு அமைச்சர் பதவியிலிருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.
மியன்மாரில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண தாய்லாந்து முன்வந்துள்ள நிலையில் திரு பார்ன்பிரீ பதவி விலகியுள்ளார்.
இதற்கான குழுவுக்குத் திரு பார்ன்பிரீ தலைமை தாங்கினார்.
அவரது எதிர்பாரா பதவி விலகலை அடுத்து, அக்குழுவுக்கு இனி யார் தலைமை தாங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
திரு பார்ன்பிரீ இல்லாததால் மியன்மாருக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பெரிதும் பாதிப்படையும், தடைபடும் என்று அஞ்சப்படுகிறது.
காஸாவில் ஹமாஸ் அமைப்பால் பிணை பிடிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டவர்களின் விடுதலைக்கு திரு பார்ன்பிரீ முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.